search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி மகள்"

    குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் எந்த சூழ்நிலையிலும் பிரிந்து விடக்கூடாது என்றும் கருணாநிதி அடிக்கடி கூறுவார் என்று அவருடைய மகள் செல்வி கூறினார். #Karunanidhi #KarunanidhiDaughter #Selvi
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    அப்பா எப்போதுமே குடும்பத்தினர் மீது மிகவும் பாசம் காட்டுவார். தமிழ் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பேரக்குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார். அதனால் எல்லா குழந்தைகளுமே தமிழில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தன.

    வெளியூர்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களுக்கு நானும் அம்மாவும், அப்பாவுடன் செல்வோம். கூட்டம் முடிந்தவுடன் என்னம்மா கூட்டம் எப்படி இருந்தது என்று கேட்பார்.

    அது தொடர்பாக ஏதாவது கருத்துக்களை கூறினால் கேட்டுக்கொள்வார். குடும்ப உறுப்பினர்களின் கருத்துகளுக்கு எப்போதுமே மதிப்பளிப்பார்.


    சினிமா பார்ப்பதற்கு பிரிவியூ காட்சிகளுக்கு அப்பா அடிக்கடி செல்வார். அப்போது குடும்பத்தில் உள்ளவர்களையும் அழைத்துச் செல்வார். நானும் அப்பாவுடன் சென்று படம் பார்த்துள்ளேன். வெளியூர்களில் நடக்கும் கூட்டத்துக்கு காரில் செல்லும் போது கட்சி தலைவர்களும் எங்களுடன் காரிலேயே வருவார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டே பயணிப்பார்.

    அப்பாவை சந்திக்க வரும் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களிடம் மரியாதையாக பேச வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பார்.

    ஒருமுறை அப்பாவை பார்ப்பதற்காக நாவலர் நெடுஞ்செழியன் வீட்டுக்கு வந்திருந்தார். நான் அப்பாவிடம் போய் நெடுஞ்செழியன் வந்திருக்கிறார் என்று கூறினேன். கோபத்தில் திட்டி விட்டார். அப்படியெல்லாம் பெயர் சொல்லக்கூடாது நாவலர் என்றே அழைக்க வேண்டும் என்றார். இதே போல அன்பழகனை பேராசிரியர் என்றே கூப்பிட வேண்டும் என்பார். மற்றபடி எந்த வி‌ஷயத்துக்கும் அப்பா எங்களை திட்டியது இல்லை.

    சிறு வயதில் சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்க ஸ்டாலினையும், என்னையும் அழைத்துச் சென்றனர். ஸ்டாலின் என்கிற பெயருக்கு சீட் தர முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறி விட்டது.

    இதுபற்றி அப்பாவிடம் கூறியதும், அப்படி ஒரு பள்ளியில் படிக்க வேண்டியதில்லை என்று கூறி வேறு பள்ளியில் சேர்த்து விட்டார்.

    தமிழ்நாட்டில் பெரியார் மண்ணான ஈரோடு, அண்ணா பிறந்த காஞ்சீபுரம், திருவாரூர் ஆகியவை கருணாநிதிக்கு பிடித்தமான ஊர்களாகும்.

    எனது திருமணத்தை பொறுத்த வரையில் எனக்கு கணவர் யார் என்பதை நான் பிறந்தவுடனேயே அப்பா முடிவு செய்து விட்டார்.

    நான் பிறந்தவுடன், தனது அக்காவுக்கு எழுதிய கடிதத்தில் செல்வத்துக்கு செல்வி பிறந்து விட்டாள் என்று குறிப்பிட்டுள்ளார். பெரியவளானதும், இவர் தான் எனக்கு கணவராக வரப்போகிறவர் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

    அண்ணா முன்பு எங்களையெல்லாம் வசனம் பேச சொல்வார். அழகிரி அண்ணன் நன்றாக வசனம் பேசி காட்டுவார். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பிரிந்து விடக்கூடாது என்று அடிக்கடி கூறுவார். அத்தையும் இதையே எங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அம்மா வைக்கும் மீன் குழம்பு அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.


    சில ஆண்டுகளாகவே நான் அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்போது என்னை பார்த்து நன்றாக ஊட்டி விடுகிறாயேம்மா என்று கூறி இருக்கிறார். (இப்படி கூறும்போது கதறி அழுதார்)

    பிற கட்சிகளின் தலைவர்கள் சந்திக்க வரும் போது அவர்களுக்கு பிடித்ததை செய்து தரச்சொல்லி கொடுப்பார். ஒருமுறை இந்திராகாந்தியை பார்க்க டெல்லி சென்றபோது எங்களையும் அழைத்துச் சென்றார். அவருடன் அமர்ந்து சாப்பிட்டதை மறக்க முடியாது.

    அப்பாவுக்கு எப்போதுமே வேட்டி-சட்டை அணிவது தான் பிடிக்கும். ஒரே ஒரு முறைதான் பேண்ட் அணிந்திருப்பார் என்று நினைக்கிறேன். அப்பாவின் மறைவை வெறுமையாகவே உணர்கிறேன்.

    இவ்வாறு செல்வி கூறினார். #Karunanidhi #KarunanidhiDaughter #Selvi
    ×